Menu

Thirupathi Seva Online Live

Wednesday, June 5, 2013

குரு கோவில்கள்

குரு பகவான்    Guru Bhagwan


திருத்தேன் குடித்திட்டை

குடந்தையிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு வியாழ பகவான் தனிச்சன்னிதியில் சிறப்புற காட்சி தருகிறார். மற்ற சிவாலயங்களில் குருதோஷம் நீங்க தட்சிணா மூர்த்தியே குருவாக வணங்கப்படுகிறார். திட்டையில் மட்டும் நவக்கிரக பிரகஸ்பதி தனியான அந்தஸ்தும் செல்வாக்கும் பெற்று தனி சன்னிதியில் விளங்குகிறார். 

பட்டமங்கலம் 

ஞான குருவாக இருந்து கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த இடம் தான் இப்போது பட்டமங்கலம் என்றழைக்கப்படுகிறது. அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குருவடிவத்தில் சிவன் அமர்ந்து அடியவர்களுக்கு வேண்டியதை வழங்குகிறார். மணமுடிக்கவும், குழந்தைப் பேற்றுக்காவும் பக்தர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகிறார்கள். 

மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும் மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன. கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி இங்கு பட்ட மங்கலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.. சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு 8 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் அமைந்துள்ளது 

தேவூர் 

கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ளது. நாகப் பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்து செல்லலாம். வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து இறைவனைப் பூஜித்ததாக வரலாறு சொல்கிறது. தேவ குருவாகிய பிரகஸ்பதி சிறப்பான வழிபாடுகள் செய்து அருள் பெற்ற சிறந்த ஊர் இது. இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழி பட்டுள்ளனர். 

பாடி

சென்னையை அடுத்துள்ள பாடி என்ற புறநகர், திருவலிதாயம் என்று பண்டைய நாட்களில் அழைக்கப் பட்டது. பரத்வாஜ் முனிவர், அனுமான் ஆகியோர் பூஜித்த தலம். வியாழகுரு இங்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இங்கு இருக்கும் இறைவன் திருவலிதாயநாதர், மற்றும் திருவல்சீஸ்வரர் என்று அழைக்கபடுகிறார். அம்பிகையின் பெயர் ஸ்ரீ தாயம்மை. ஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்களைப் பெற்ற புண்ணியதலம். 

தக்கோலம்

அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது தக்கோலம் எனப்படும் திருவூறல். இங்குள்ள தட் சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது. சடையோடு கூடிய முகம். சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம். இருக்கையில் ஏற்றி வைத்த காலோடு மிகச்சிறப்பான கலை நயத்தோடு உள்ளார் தட்சிணாமூர்த்தி. 

குருவித்துறை

மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கருவில் இருக்கும் ஊர் குருவித்துறை.இங்கு சித்திரரத வல்லப பெருமாள் ஆலயம் உள்ளது. குருவின் பிரச்சினையைத் தீர்த்து சிறப்பாக அவருக்குக்காட்சி தந்தருளிய பெருமாள் இவர். இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்குத் தனிக்கோயில் உள்ளது. வைஷ் ணவக் கோயிலில் இப்படி குருபகவான் குடி இருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு. 

திரிசூலம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எதிரில் திரிசூலம் என்னுமிடத்தில் நான்கு மலைகளுக்கு இடையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. நான்கு மலைகளும் நான்கு வேதங்களாவும் அவற்றின் மெய்ப் பொருளாகச் சிவன் தோற்றமளிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. 

இங்கு கருவறையில் திரிசூலநாதலிங்கத்துடன் திரிபுர சுந்தரி அம்மனும் சேர்ந்தே காணப்படுவது விசேஷமான ஒன்று.அம்மனின் உள்ளகை தங்கத்தாலானது. இங்கு துவார பாலகர்களாக முருகனும் கணபதியும் காட்சி தருகிறார்கள். 

இந்தத் திரிசூலநாதர் ஆலயத்தில் எல்லா மூர்த்திகளுமே திறந்த வேலைப்பாடு என்னும் படியாக எழுந்தருளியுள்ளார்கள். இங்கு குத்திட்ட கால்களோடு விராசனமாய் (வீராசன கோலத்தில்) எம் பெருமான் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். கலைநயம் மிக்க இம் மூர்த்தியின் தோற்றம் நெஞ்சை விட்டு அகலாத அழகு கொண்டது. 

திருவொற்றியூர்

திருவொற்றியூரில் உள்ள குரு தட்சணாமூர்த்தி கோவில் சிறப்பானதாகும். ஏனெனில் அங்கே இருக்கும் குரு தட்சணாமூர்த்தி வடக்கு நோக்கி சுமார் 6 அடி உயரத்தில் இருப்பார். பொதுவாக குரு தட்சணாமூர்த்தி தெற்கு நோக்கியே வீற்றிருப்பார். 

ஆனால் இந்த கோவிலில் மட்டும் வடக்கு நோக்கி அழகாக வீற்றிருப்பார். பாடி திருவலிதாயம் ஈஸ்வரன் கோவிலில் உள்ள குரு தட்சணாமூர்த்தி சன்னதி மிகச்சிறந்த குரு பரிகார பூஜை ஸ்தலமாக விளங்குகிறது.

No comments:

Post a Comment